பிரச்சனையும் பின்னணியும்:
கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. தமிழீழ இசைக் கல்லூரியின் முன்னாள் பொறுப்பாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் இசைத்துறை விரிவுரையாளருமான கண்ணதாசனுக்கு 2017ஆம் ஆண்டு யூலை மாதம் 26ஆம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
சுமந்திரனின் நடவடிக்கை:
கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கை கண்ணதாசன் சார்பில் எம். ஏ. சுமந்திரன் கையாண்டிருந்தார்.
வழக்கு மே மாதம் 2020ல் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சுமந்திரனின் சமர்ப்பணங்களை அடுத்து, வவுனியா மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை நியாயப்படுத்த முடியவில்லை என்றும் அதனால் மீண்டும் குற்றத்தை விசாரணை செய்ய வேண்டும் எனவும் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான குமார் ரட்ணம் விண்ணப்பத்திருந்தார்.
ஏற்கனவே இடம்பெற்ற விசாரணையை நியாப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டுமே அன்றி மீள் விசாரணைக்கு இணங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் பதிலுரைத்திருந்தார்.
விளைவு:
குறித்த தினம் குற்றவாளியும் மன்றுக்கு அழைத்துவரப்பட்டிருக்கவில்லை. அதனால் குற்றம் சாட்டப்பட்டவரையும் அழைத்துவருமாறும் மீள் விசாரணையா அல்லது விடுதலையா என்பதற்கான கட்டளையை வழங்குவதாக வழக்கு ஜூலை மாததிற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
பயன்:
இதன் அடிப்படையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, பிரியங்க பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட அமர்வு அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்துச் செய்து அவரை வழக்கிலிருந்து விடுவித்து, சிறையிலிருந்து விடுதலை செய்யக் கட்டளை வழங்கியது.